முகப்பு
தமிழ்நாடு

நாகூரில் தந்தையைக் கொன்ற மகன் கைது!

நாகூரில் தந்தையைக் கொன்ற மகன் கைதாகி இருப்பது பற்றி...

Updated On : 14 அக்டோபர், 2025 at 5:00 AM
கொலை (கோப்புப்படம்)
பகிர்:

நாகூர் அருகே தந்தையை அடித்துக் கொலை செய்த மகனைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்டம், நாகூர் வெங்கிடங்கால் பிரதான சாலையைச் சேர்ந்த வடிவேலு மகன், சேகர் (50). நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி ராஜகுமாரி (45) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், வைப்பூரில் உள்ள அவரது தாய்வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது மகன் வெங்கடேஷ் (25), மகள் லத்திகா (20) சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டில் தந்தை சேகருடன் வெங்கடேஷுக்கு திங்கட்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மகன் வெங்கடேஷ், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சேகர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, வெங்கடேஷ் அதே ஊரில் வசித்துவரும், சித்தப்பா அறிவழகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்வு இடத்திற்குச் சென்ற அறிவழகன் அவரது சகோதரரை அவசர ஊர்தியில் அழைத்துச் சென்று நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு மருத்துவர்கள் சேகருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து நாகூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த சேகரின் உடலை உடற்கூராய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

summary

Son arrested for killing father in Nagore

முழு கட்டுரையைப் படிக்க →