அடுத்த 2 மணிநேரம் சென்னை, 20 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணிநேரத்துக்கான மழை நிலவரம் பற்றி...
தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடியவிடிய பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், சென்னை வானிலை மையம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணிவரை கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.15) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.