மதுரையில் சாலை நடுவே சாக்கு மூட்டையில் கிடந்த ரூ. 17 லட்சம் பணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பணத்தை ஒப்படைத்த பெண்ணை பாராடிய காவல்துறையினர், மூட்டையில் கிடந்த பணம் ஹவாலா பணமா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த சிவ பக்தரான செல்வமாலினி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல நேற்றிரவு கோவிலில் இருந்து செல்வமாலினி வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது மதுரை வக்கில் புதுத்தெரு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது.
இதனை ஓரமாக தள்ளி விடுவதற்காக தனது காலால் எட்டி உதைத்த போது சாக்குமூட்டையில் 500 ரூபாய் பணக்கட்டு இருப்பது போல தெரிந்துள்ளது.
இதனை பார்த்து பதற்றமடைந்த செல்வமாலினி அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் சாக்குமூட்டையைப் பிரித்து பார்த்தபோது ரூ. 17.50 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக இருந்துள்ளது.
இதையடுத்து, விளக்குத்தூண் காவல்நிலையத்திற்கு சாக்கு மூட்டையை எடுத்துச் சென்று செல்வமாலினி ஒப்படைத்துள்ளார். செல்வமாலினியின் நேர்மைக்கு காவல்துறையினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
சாக்கு மூட்டையில் கிடந்தது ஹாவாலா பணமா? வியாபாரிகள் யாராவது கொண்டுவந்த பணமா? என விளக்குத்தூண் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.