கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்!
திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சூரசம்ஹாரத்தைக் கண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிகழ் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த அக். 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
விழா நாள்களில் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக். 27) நடைபெற்றது.
சூரனை வதம் செய்த இடம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைக் காண காலை முதலே பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்தனர்.
சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து, சூரசம்ஹார நிகழ்வு தொடங்கியது. பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் சூரபத்மனை வதம் செய்து முருகப்பெருமான் ஆட்கொண்டார்.
இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர். மலேசியா, இலங்கை, லண்டன் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த பக்தா்களும் திருச்செந்தூரில் தங்கியிருந்து சூரசம்ஹாரத்தைக் கண்டனர்.
திருச்செந்தூரைப் போலவே, மற்ற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது.
சிறப்பு ஏற்பாடுகள்
பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜாண் தலைமையில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட 4,000 போலீஸாா், ஊா்க்காவல் படையினா், கடலோரக் காவல் படையினா் தீவிரமாக ஈடுபட்டனர்.
கடற்கரையில் உயா்கோபுரங்கள் அமைத்தும், ரகசிய கேமராக்கள் பொருத்தியும் கண்காணிப்பு பலபடுத்தப்பட்டிருந்தது.
பக்தா்களின் வசதிக்காக நகரின் எல்லையில் 17 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து 25 சுற்றுப் பேருந்துகள் மூலம் பக்தா்கள் கட்டணமின்றி நகருக்குள் வந்துசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிக்க | சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் புயல்; நாளை இரவுக்குள் கரையைக் கடக்கும்!