கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்
கொடைக்கானலில் இனி ஒரே இடத்தில் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முறை அமல்.
கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, இனி அனைத்து இடங்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இதுவரை, குணா குகை, தூண் பாறை, ஃபைன் ஃபாரஸ்ம், மோயர் சதுக்கம் உள்ளிட்ட 4 இடங்களையும் பார்வையிட, தனித்தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்தும் நிலை இருந்தது.
இதனால், கூட்டம் அதிகமான நேரங்களில் வரிசையில் நின்று நுழைவுக் கட்டணம் செலுத்தவே அதிக நேரம் விரையம் ஆனது.
Advertisement
இந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கொடைக்கானலில் குணா குகை, தூண் பாறை, ஃபைன் ஃபாரஷ்ட், மோயர் சதுக்கம் ஆகிய நான்கு இடங்களையும் சுற்றிப்பார்க்க ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கும் முறை பின்பற்றப்படவிருக்கிறது.
அதன்படி, வனத்துறை சுற்றுலா இடம் தொடங்கும் பகுதியான தூண் பாறையில் அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் சேர்த்து பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்விடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படும்.
தமிழகம் மற்றும் வெளி மாநில பயணிகளில் பெரியவர்களுக்கு ரூ.30ம், சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணம். அதுபோல, வெளிநாட்டினருக்கு ரூ.1,000 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.