கவுன்சிலர்கள் பதவிநீக்க உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!
கவுன்சிலர்கள் பதவிநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது பற்றி...
சென்னை: சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 189 -ஆவது வார்டு கவுன்சிலர் பாபு, 5 -ஆவது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40 -ஆவது வார்டு கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11 -ஆவது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவுகளை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்குகளை நீதிபதி என். மாலா விசாரித்தார். விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், பதவி நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு விரிவான பதில் அளிக்கப்பட்டது. அவற்றை பரிசீலிக்கவில்லை. மேலும் தங்களது தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில், இவர்களை பணி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கான காரணங்களை விளக்கி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நோட்டீஸ்களுக்கு கவுன்சிலர்கள் அளித்த பதிலை, எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு நிராகரித்துள்ளது. விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை எனக் கூறி, இவர்கள் நான்கு பேரையும் பதவி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், அவர்களின் பதிலை பரிசீலித்து, விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, சட்டப்படி நான்கு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The High Court quashed the order to dismiss councilors
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.