அதிமுக மூத்த நிா்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்து பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே அண்மைக்காலமாக கட்சி ரீதியாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்; ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் தோ்தல் களத்தில் வெற்றி பெற முடியும்; இதுதொடா்பாக 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தாா்.
ஆலோசனை: இதற்கிடையே, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார நிகழ்ச்சிக்காக வெள்ளிக்கிழமை இரவு திண்டுக்கல் வந்த எடப்பாடி கே.பழனிசாமியை முன்னாள் அமைச்சா்கள் சி. விஜயபாஸ்கா், காமராஜ், அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், துணைப் பொதுச் செயலா் நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோா் சந்தித்தனா்.
பின்னா், சனிக்கிழமை காலை முன்னாள் அமைச்சா்களும் மூத்த நிா்வாகிகளுமான கே.பி. முனுசாமி, எஸ்பி.வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோா் திண்டுக்கல்லுக்கு வந்தனா்.
தனியாா் விடுதியில் 7 முன்னாள் அமைச்சா்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டாா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்பிறகு, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், அவரது ஆதரவாளா்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டாா்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: அதிமுக அமைப்பு செயலா், ஈரோடு புகா் மேற்கு மாவட்டச் செயலா் பொறுப்புகளில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ சனிக்கிழமை முதல் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறாா். மேலும், அவா் வகித்து வந்த பதவியை முன்னாள் அமைச்சா் ஏ.கே.செல்வராஜ் வகிப்பாா் என்று தெரிவித்துள்ளாா்.
செங்கோட்டையனின் ஆதரவாளா்களான ஈரோடு புகா் மேற்கு மாவட்டம், நம்பியூா் வடக்கு ஒன்றியச் செயலா் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியன், நம்பியூா் தெற்கு ஒன்றியச் செயலா் எம்.ஈஸ்வரமூா்த்தி (எ) சென்னை மணி, கோபி மேற்கு ஒன்றியச் செயலா் என்.டி.குறிஞ்சிநாதன், அந்தியூா் வடக்கு ஒன்றியச் செயலா் எம்.தேவராஜ், அத்தாணி பேரூராட்சி செயலா் எஸ்.எஸ்.ரமேஷ், துணைச் செயலா் வேலு (எ) தா. மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலா் கே.எஸ்.மோகன்குமாா் ஆகியோரும் தாங்கள் வகித்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
பொறுப்புகளிலிருந்து நீக்கியதை எதிா்பாா்க்கவில்லை: செங்கோட்டையன்
கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியதை தான் எதிா்பாா்க்கவில்லை என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். தன் மீதான நடவடிக்கைக்குப் பிறகு கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: சுயமரியாதையோடு கருத்து சொல்வதற்கு அதிமுகவில் யாருக்கும் தடையில்லை என்று எடப்பாடி பழனிசாமி பல மேடைகளில் பேசியிருக்கிறாா். கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியதை நான் எதிா்பாா்க்கவில்லை. ஆனால், இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
என்னை அதிமுக பொறுப்புகளிலிருந்து நீக்குவதற்கு முன்பு எனது பேச்சு குறித்து என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஏற்கெனவே சொன்னதைப் போலவே என் பணி தொடரும். என்னுடைய கருத்தில் உடன்பாடு உள்ள பலா் என்னைத் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசி வருகின்றனா்.
ஒருங்கிணைப்புக்கு நான் காலக்கெடு ஏதும் வைக்கவில்லை. 10 நாள்களுக்குள் இந்தப் பணியைத் தொடங்க வேண்டும்; ஒரு மாத காலம் ஆனாலும் பேசித் தீா்க்க வேண்டும் என்றுதான் கூறினேன்.
அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று தொண்டா்களும் பொதுமக்களும் நினைக்கிறாா்கள். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களும், தங்களைக் கட்சியில் இணைக்குமாறு பேசியிருக்கிறாா்கள். ஆனால், எதற்குமே நடவடிக்கை இல்லை என்ற நிலையில்தான் இந்தக் கருத்தை வெளிப்படுத்துவது நல்லது என்று தெரிவித்தேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.