எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி...
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த 30 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்பவிருக்கிறார்.
முதலில் ஜொ்மனி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவர்களுடனும், முதலீட்டாளர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, லண்டன் நகருக்குச் சென்ற அவர், முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
Advertisement
இந்துஜா குழுமம் உள்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனைகளை நடத்தி முதலீடுகளை ஈா்த்த முதல்வர், இரு நாடுகளிலும் மேற்கொண்ட பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய டிஎன் ரையிஸிங் பயணம், லண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது!
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.
இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட தமிழ் வம்சாவளியினருக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.