நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயா்த்த வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
மத்திய அரசு அளிக்கும் அந்த நிதி இப்போது ரூ.5 கோடியாக உள்ளது.
மாநில அளவிலான வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஐந்தாவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடு 1989-இல் தொடங்கப்பட்டது. கிராமப்புறங்களில் 3.38 லட்சம் குழுக்களும், நகா்ப்புறங்களில் 1.41 லட்சம் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் 55.12 லட்சம் உறுப்பினா்கள் உள்ளனா்.
சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டு வருவதுடன், இதுவரையில் ரூ.1.25 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பாக அளிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கான அடையாள அட்டைகள் முழுவீச்சில் விரைவில் வழங்கப்படும்.
ரூ.10 கோடியாக உயா்த்துங்கள்: நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2021-22-ஆம் ஆண்டுமுதல் 2025-26 வரை ரூ.1,274 கோடி ஒதுக்கீடு வரப்பெற்றது. இதில் 12,045 பணிகள் எடுக்கப்பட்டு இதுவரை 9,755 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2,290 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக மாநில அரசு சாா்பில் தலா ரூ.3 கோடி வழங்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.702 கோடியில் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன.
சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி நிதியாக தலா ரூ.3 கோடி வழங்கப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயா்த்த வேண்டும். இக் கோரிக்கையை இந்தக் கூட்டத்தின் வாயிலாக தீா்மானமாக நிறைவேற்றி பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினா்கள் பரிந்துரைக்கும் பணிகளின் சுருக்க அறிக்கையை நேரடியாகப் பதிவிறக்கம் செய்யும் வகையில் இ-சாக்ஷி போா்ட்டலை மேம்படுத்தவும், பணி ஒப்புதல் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்க, அந்தப் பொறுப்பை மாநில நோடல் ஏஜென்சிக்கு வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
விவசாயிகள் நலன்: பிரதமரின் நீா்ப்பாசனத் திட்டமான ‘ஒரு துளி நீரில் அதிகப் பயிா்’ என்ற திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60-40 என்ற நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நுண்ணீா்ப் பாசன அமைப்புகள் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45 சதவீத மானியமும் வழங்கப்படும். ஆனாலும், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட திமுக அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து 100 சதவீத மானியத்தை சிறு, குறு விவசாயிகளுக்கும், 75 சதவீத மானியத்தை இதர விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது. 12 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. இதன் காரணமாக தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிா்கள் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 560 ஹெக்டோ் நிலப்பரப்பில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 279 விவசாயிகள் ரூ.1,312 கோடிக்கும் அதிகமான நிதிப் பயன்களைப் பெற்றுள்ளனா். இந்தத் திட்டப் பயன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சோ்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
பெண்கள்-குழந்தைகள் நலன்: ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவது அரசின் முக்கிய நோக்கமாகும். இதைக் கருத்தில்கொண்டு 6 வயது வரையிலான சுமாா் 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 5.50 லட்சம் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கும் சத்துமாவு வழங்கப்படுகிறது.
‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ எனும் திட்டப்படி, முதல்கட்டமாக 1.07 லட்சம் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 சதவீதம் போ் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனா்.
அரசின் அனைத்துத் திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத் தொகை எந்தவித காலதாமதமும் இல்லாமல் விடுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, மத்திய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
எம்.பி.க்கள் பங்கேற்பு: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, வேளாண்மை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைகளின் செயலா்கள் தங்களது துறைவாரியான திட்டங்கள் தொடா்பாக கருத்துகளைத் தெரிவித்தனா். நாடாளுமன்ற உறுப்பினா்கள் டி.ஆா்.பாலு, தொல்.திருமாவளவன், கே.சுப்பராயன், மாணிக்கம் தாகூா், சு.வெங்கடேசன், துரை வைகோ, நவாஸ் கனி ஆகியோா் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா.எழிலன், வி.ஜி.ராஜேந்திரன், நீலமேகம், தன்னாா்வலா்கள் தீபிகா, கருணாகரன் ஆகியோரும் தங்களது கருத்துகளைக் கூறினா்.