சென்னை: தமிழகம் தொடர்ந்து 8 முறை சிறந்த உடல் உறுப்பு தானத்திற்கான விருதை பெற்றுள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளில் உடல் உறுப்பு தானம் அளித்தவர்களின் பெயர்கள் கொண்ட ஒரே மாதிரியான கல்வெட்டை வைக்கும் பணியை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் "உறுப்பு தான தினம் - 2025" உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்தல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடலுறுப்பு தானம் செய்த 268 குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களின் தியாகத்தை போற்றுவதும், மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக செய்த மருத்துவர்களுக்கும் பாராட்டு நிகழ்வு நடைபெறுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2008 செப்டம்பர் 5ம் தேதி மூளை சாவடைந்தவர்களிடமிருந்து உடலுறுப்பு பெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உருவானது.
2024ம் ஆண்டில் 268 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளது. இதனை பாராட்டி மத்திய அரசு, உடலுறுப்பு தானத்தில், சிறந்த மாநிலம் என்ற விருது அளித்துள்ளது.
நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறாதது வருத்தத்திற்குரியது.
இனிவரும் காலங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.
வரும் காலங்களில் இதனை மேற்கொள்ளும் எண்ணம் அந்தந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உருவாகிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.
உடல் உறுப்பு தானம் செய்வதில் தொடர்ந்து முதலிடத்தில் தமிழ்நாடு இருப்பதை மத்திய அமைச்சர் மிகச்சிறப்பாக இந்த காரியத்தை தமிழ்நாடு செய்து கொண்டிருக்கிறது என பாராட்டினார்.
தொடர்ந்து எட்டு முறை தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்திற்கான விருதை பெற்றிருக்கிறது.
முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கு பிறகு இதுவரை 522 பேர் உடல் உறுப்பு செய்துள்ளார்கள். 23189 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் உடல் உறுப்பு தானம் அளித்தவர்களின் பெயர்கள் கொண்ட ஒரே மாதிரியான கல்வெட்டை வைக்கும் பணியை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கி வைக்க உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிக்க... விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா? நம்பிக்கையும் உண்மையும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.