தவெக விஜய் பிரசாரத்தில்... 
தமிழ்நாடு

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கரூர் சம்பவத்தில் தவெகவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகள்...

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு திடல் போன்ற பகுதியை தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்காதது ஏன்? என்று கரூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு சனிக்கிழமை இரவு 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதல்கட்டமாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பொன்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பரத் குமார் அமர்வில் செவ்வாய்க்கிழமை காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், “தவெகவினர் அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. தவெக பொதுச் செயலாளர் ஆனந்தின் ஒப்புதலுடன், தவெக நிர்வாகிகளை அழைத்துச் சென்று இடத்தை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது. வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்யும்போதே ஆனந்த் திருப்தி தெரிவித்தார். அப்போது வேலுச்சாமிபுரத்தை ஏற்பதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. நேர அட்டவணையை விஜய் கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். வேகமாக வரச் சொல்லி காவல்துறையினர் அறிவுறுத்தியதை மீறி, மாற்று வழியில் வந்தனர்.” என்று வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பரத் குமார், “மூன்று இடமும் போதுமானது கிடையாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் குறைவாக வருவார்கள் என்று எப்படி மதிப்பிட்டீர்கள்?, 10,000 பேர் தான் வருவார்கள் என்று எதனை வைத்து கூறினீர்கள்?, திடல் போன்ற இடத்தை கேட்காதது ஏன்?, அதிக கூட்டம் வருமென்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?, கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது.

தவெக தரப்பில் அளித்த பதிலில், “காவல்துறையினர் ஒவ்வொரு மனுவாக நிராகரித்தனர். சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என நினைத்தோம். இவ்வளவு கூட்டம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. காவல்துறையின் 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவல்துறை தரப்பில், “கூட்டம் அளவுகடந்து சென்ற போது பேருந்தை முன்னதாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் அறிவுறுத்தினோம், ஆனால், ஆதவ் அர்ஜுனா கேட்க மறுத்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

Court questions TVK in Karur incident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே வேலைக்கு நிலம்: லாலு உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!

மார்கழி மாதத்தில் கோலம் போடுபவர்கள் கவனிக்க!

தணிக்கைச் சான்றிதழ் பெற்ற திரௌபதி 2..! நமது மண்ணின் வரலாறென இயக்குநர் பெருமிதம்!

பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! இணைய சேவைகள், தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு!

SCROLL FOR NEXT