ஸ்டாலின் பதறுகிறார்! நான் சொன்ன அரசியல் வெடிகுண்டு தாறுமாறாக வெடிக்கிறது! - விஜய்
சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பேசியது பற்றி...
திமுக அரசால் ஒரு போட்டித் தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை என்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ரத்து குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தவெக நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12.30 மணிக்குத் தொடங்கியது. சேலம் மாவட்ட நிர்வாகிகள் பேசியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பேசினார்.
அவர் பேசுகையில், "டிஎன்பிஎஸ்சி தேர்வை அறிவித்துவிட்டு உடனே ரத்து செய்துவிட்டார்கள். இது உலகத்துக்கே தெரியும். தேர்வை ரத்து செய்துவிட்டு தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லிவிட்டு கடந்து போய்விட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக இரவு - பகலாக படித்து கஷ்டப்பட்டு எப்படியாவது அந்த வேலை நமக்கு கிடைக்காதா என்று எதிர்பார்த்திருந்த நமது தம்பி, தங்கைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள்? அதை யாராவது யோசித்துப் பார்த்தீர்களா? ஒரு தேர்வை ஒழுங்காக நடத்தத் தெரியவில்லை. இதில் உலக நாடுகளுடன் போட்டி போடுகிறார்களாம்.
Advertisement
Advertisement
நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள், அனைவரும் தைரியமாக இருங்கள் என்று கூறுங்கள், வரப்போவது உங்கள் ஆட்சி, நம்முடைய ஆட்சி. அதனால் சமூக நீதிக்கான ஒரு நல்ல ஆட்சியை அமைப்போம். இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை மனதில் வைத்துக்கொண்டு வெளிப்படையாக ஒரு தீர்வைக் காணுவோம்.
நான் விக்ரவாண்டி மாநாட்டில் பேசும்போது ஒன்று சொன்னேன். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு. அந்த அரசியல் வெடிகுண்டு இப்போது அனைத்து கூட்டணியிலும் வெடித்துக்கொண்டு இருக்கிறது. தாறுமாறாக வெடித்துக்கொண்டிருக்கிறது,
மு.க. ஸ்டாலின் பதறுகிறார், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எல்லாம் தமிழ்நாட்டில் ஒத்துவராது என்று கூறுகிறார். அவர்களைப் பொருத்தவரைக்கும் ஜெயிப்பதற்கு மட்டும்தான் கூட்டணி. மற்ற அனைத்துக்கும் அவர்கள் தனி அணி. அவர்கள் மட்டுமே ஒரே அணி. வெல்வோம் ஒன்றாக, ஆனால் வரும் செல்வத்தை எல்லாம் பார்ப்போம் தனியாக என்று இருக்கிறார்கள். அதுதான் சீக்ரெட். புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். நம்முடன் நம் மக்கள் இருக்கிறார்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்" என்றார்.
TVK vijay speech in salem meeting on tnpsc group 2 exam cancellation and criticized dmk alliance
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.