இது அரசா? சர்க்கஸ் கம்பெனியா? தவெகவை கடுமையாக விமர்சித்த உதயநிதி
தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தது குறித்து...
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "சமீபகாலமாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருக்கிறேன். கடந்த 3 மாதங்களில் 4 முறை தஞ்சாவூருக்கு வந்து சென்றேன். நான் வரவில்லையென்றாலும், இந்த அரசே என்னை கைது செய்து, இங்கு அழைத்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டியுள்ளது. நாம் சரியாக இருந்தாலும், மேடைக்குக் கீழிருந்து பேசி நம்மை சிக்கவைத்து விடுவர். கைது நடவடிக்கைக்கெல்லாம் பயந்தவன் கிடையாது உதயநிதி.
Advertisement
Advertisement
ஆக. 3-ல் தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றுதான் போராட்டத்தில் பேசினேன்.
டம்மி முதல்வர், கேடுகெட்ட அரசாங்கம், வெக்கங்கெட்ட முதல்வர், தேர்தல் வாக்குறுதியைச் செயல்படுத்த வக்கில்லை என்றெல்லாம் பேசினேன். அவற்றுக்கெல்லாம் அவர்களுக்கு கோபம் வரவில்லை.
ஆனால், காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதும் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. இரவோடு இரவாக தஞ்சையிலிருந்து காவல்துறையினரை அனுப்பி, அதிகாலையிலேயே என் வீட்டுக்கு வந்து என்னை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற விசாரணையில் என்னை கைது செய்யவில்லை என்றும், விசாரணைக்குப் பிறகு அனுப்பி விடுவோம் என்று பல்டி அடித்து விட்டனர்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க அரசிடம் நிதி இல்லை என சொல்லிவிட்டனர். ஆனால், எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். அதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? வறட்சி நிவாரணம் கேட்ட விவசாயிகளுக்கு, இதுவரையில் தவெக அரசு பதிலளிக்கவில்லை.
தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கு ரூ. 2,500 உரிமைத் தொகை ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், வேலையில்லாதோருக்கு மாதம் ரூ. 4,000 என எதுவுமே தவெக அரசு கொடுக்கவில்லை.
சட்டப்பேரவையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பதேயில்லை. 3, 4 அமைச்சர்கள்தான் பதிலளிக்கின்றனர். அவர்களும் கேள்விகளுக்கான சரியான பதிலளிக்காமல், திசைதிருப்புகின்றனர்.
சட்டப்பேரவைக்கு அமைச்சர்களும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் மக்கள் பிரச்னை பேசுவதற்காக வருவதில்லை. அவர்களுக்குத் தேவை 4 ரீல்ஸ்.
இவர்கள் சர்கார் நடத்துகிறார்களா? அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா? என்று கேட்கும் நிலையில்தான் இந்த அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.
திமுக ஆட்சியில் 11.19 சதவிகிதத்துடன் இந்தியாவில் முன்னேற்றமடைந்த முதல் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, இன்று பாதாளத்தில் தள்ளிவிட்டனர்.
தமிழ்நாட்டில் இன்று இருக்கும் எந்தவொரு பிரச்னை குறித்தும் இன்றைய முதல்வருக்கு கவலை கிடையாது" என்று தெரிவித்தார்.
Is this a government or a circus troupe? LoP Udhayanidhi Stalin criticizes TVK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.