திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!
திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருப்பது பற்றி...
திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை அறிவித்தார்.
அத்துடன், கார் பராமரிப்பு படியாக ரூ. 75,000-ம், உதவியாளர் படியாக ரூ. 25,000 என மொத்தம் ஒரு உறுப்பினருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது:
”நேற்று முந்தினம் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் புதிதாக கார் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு கடனில் இருப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்திருப்பதால், திமுகவைச் சேர்ந்த 59 உறுப்பினர்களும் அரசு வாகனத்தை பெற வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம்.
மேலும், அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்க தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு நலிவடைந்தவர்களுக்கு மட்டுமே வாகனம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
”புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர் மட்டுமல்ல, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஏழ்மையாக இருக்கிறார்கள். விசிகவிலிருந்து பேருந்தில் வரக்கூடிய எம்.எல்.ஏ. உள்ளார். அனைவரும் சமம் என்ற முறையில் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவில் கார் இருப்பவர்கள் அரசின் காரை ஏற்கப் போவதில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு இரண்டு, மூன்று பங்களா இருக்கிறது. ஆனால், அவர் அரசு பங்களாவில்தான் இருக்கிறார். உங்கள் தேர்தல் பத்திரத்தில் வீடு இல்லை, கார் இல்லை, ரூ. 10,000தான் இருக்கிறது எனக் கூறலாம்.
தவெகவில் ஏற்கெனவே கார் இருப்பவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். கார் என்பது ஆடம்பரம் இல்லை. மக்களை சந்திப்பதற்கான தேவை” எனத் தெரிவித்தார்.
DMK MLAs do not want government cars! Udhayanidhi Stalin announces!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.