பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது? - நயினார் நாகேந்திரன் பதில்!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி...
பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை(ஏப். 3) வெளியாக வாய்ப்புள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,
"மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை(ஏப். 3) இங்கு வருகிறார். அதன்பின்னர் முடிவெடுத்து அறிவிக்கப்படும். இதில் காலதாமதம் எதுவும் இல்லை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. நாளை பிரதமர் இங்கு வந்து பின்னர் புதுச்சேரி செல்கிறார். எங்களுடைய மையக் குழுவின் மூத்த தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பார்கள். பாஜக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும்" என்றார்.
மேலும் "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா பயன்பாடுதான் இருக்கிறது. பள்ளி வாசல்களில் மிட்டாய்க்கு பதிலாக கஞ்சா விற்கப்படுகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ அல்லது ஜீரோ.
விஜய் திருச்சி கிழக்கில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது அவருடைய விருப்பம்., மக்கள் எந்தளவுக்கு வாக்கு செலுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து முடிவு இருக்கிறது.
தமிழ்நாட்டில் விஜய்க்கு மட்டுமா பாதிப்பில்லை? திமுக ஆட்சியில் எந்த தனி மனிதனுக்கும் பாதுகாப்பில்லை" என்று கூறினார்.