திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி...
திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள், ஆனால் அது நடக்காது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையும் வருவாய் துறையும் திமுகவிற்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டு அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள் அது நடக்காது என்ன நெல்லை பழைய பேட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
நெல்லை பழைய பேட்டையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
Advertisement
"தமிழகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மத்திய அரசின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் மாநில அரசு, மக்கள் பயன்பாட்டிற்கான முன்னேற்றத் திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பொய். தமிழக முதல்வர் சொல்லும் மாநில வளர்ச்சி எதில் என்றால், கஞ்சா விற்பனையில் மட்டுமே.
காங்கிரஸ் கட்சி எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. திமுக கூட்டணியில் மட்டும்தான் அவர்களுடைய கட்சி தெரிகிறது. ஆலங்குளம் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் லாக்கப் மரணங்களும் நடைபெற்று வருகின்றன. சட்டம் - ஒழுங்கைக் கட்டுப்படுத்த காவல்துறையால் முடியவில்லை.
முதல்வரைப் பற்றி தவறாகப் பேசினால் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், பிரதமரை கொலை செய்ய வேண்டும் என கூறியவர்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார். காவல்துறை உயர் அதிகாரிகளும் அதேபோல் செயல்படுகின்றனர். வருவாய் துறையும் காவல்துறையும் இணைந்து திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முயற்சி செய்கின்றனர். ஆனால், அது நிச்சயமாக நடைபெறாது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வழங்கிய மக்கள் நல திட்டங்களைப் பார்த்து காப்பி அடித்தே திராவிட முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.