திருப்பரங்குன்றத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு திமுக, பாஜகதான் காரணம்: சிடிஆர். நிர்மல் குமார்
திருப்பரங்குன்றத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு திமுக, பாஜகதான் காரணம் என்று தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு திமுக, பாஜகதான் காரணம் என்று தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
தவெக இணைப் பொதுச்செயலாளரும் திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதி வேட்பாளருமான சிடிஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் கடந்த 60, 70 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்து அலுத்துப் போய்விட்டனர், தொகுதியில் ஒரு சாதாரண சாலை வசதி கூட இல்லை. மக்கள் தற்போது ஒரு பெரிய மாற்றத்தை விரும்புகின்றனர்.
தனது வேட்பு மனுத் தாக்கல் விஜய்யின் ஆசியுடன் நடைபெற்றுள்ளது. வரவிருக்கும் தேர்தல் மாற்றத்திற்கான தேர்தலாக அமையும். திருப்பரங்குன்றத்தில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே காரணம். திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது. அமைதியாக இருந்த ஒரு பகுதியை இன்று 50-க்கும் மேற்பட்ட பேரிகார்டுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் என ஒரு ராணுவ முகாம் போல மாற்றிவிட்டார்கள்.
Advertisement
இத்தனை ஆண்டுகள் வராத பிரதமர் மோடி, தேர்தல் நேரத்தில் இங்கு வருவது மத ரீதியான வாக்குகளைக் கவரவே வருகிறார். தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில்வேல், சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த விவகாரத்தைத் திட்டமிட்டுப் பின்னால் இருந்து இயக்கியதாக அண்ணாமலை பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியாமல் அதிகாரிகள் மட்டத்தில் இந்தத் தேர்தல் கையாளப்படுகிறது.
மதுரையில் அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவலர்களைத் தேர்தல் ஆணையம் உடனடியாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நிலவி வரும் அமைதியைக் குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம், ஜாதி அல்லது மத ரீதியான எமோஷனல் அரசியலைத் தனது கட்சி ஒருபோதும் முன்னெடுக்காது. தொகுதி மக்களிடையே தனக்குக் கிடைத்துள்ள வரவேற்பு மிகப்பெரிய வெற்றியைத் தரும் எனக் கூறினார்.