சத்தான்குளம் வழக்கில் நீதி! மற்ற குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது : ஜெயராஜ் மகள்
இது போன்ற துன்பம் யாருக்கும் வரக்கூடாது என சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர் கருத்து
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நீதி கிடைத்துள்ள நிலையில், காவல் துறை மரணங்களால் இனி எந்தவொரு குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது என மறைந்த ஜெயராஜின் மகளும் பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்சிஸ் இன்று (ஏப். 6) தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மதுரையில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பெர்சிஸ் பேசியதாவது:
Advertisement
''2020 ஆம் ஆண்டு விசாரணை என்ற பெயரில் என் தந்தையையும் தம்பியையும் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது காவல் துறையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது.
நீதிமன்றம் எங்களுக்கு நீதி வழங்கும் என நம்பிக்கையோடு நாங்கள் இருந்தோம். எங்கள் துன்பத்தை அவர்கள் துன்பமாக எண்ணி பலரும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். உள்ளுர் மக்கள் சேர்ந்து போராட்டம் செய்ததால், தற்போது நீதி கிடைத்துள்ளது.
எங்களுக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகைகளுக்கு நன்றி. இன்று கிடைத்த நீதி எல்லா பாமர மக்களுக்கும் கிடைத்த நீதி. எங்களைப் போன்று எந்தவொரு குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் வழக்கை தொடர்ந்து நடத்தினோம்.
இழந்த உயிர் திரும்ப வரப்போவது இல்லை என்றாலும், இது போன்ற துன்பம் வேறு ஒரு குடும்பத்துக்கு வரவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். தற்போது அதற்கு ஏற்ப தீர்ப்பும் கிடைத்துள்ளது.
இனிமேல் காவல் துறை விசாரணை மரணம் போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என நீதிபதியும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனையை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட எங்களுக்கான நீதி கட்டாயம் கிடைக்கும் என்று, 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடினோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்'' எனக் குறிப்பிட்டார்.
சாத்தான்குளம் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனர். இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனவும், குற்றஞ்சாட்டபட்ட காவலர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 23- ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், காவலர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை கடந்த 30-ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் கடந்த மாதம் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மத்திய, மாநில அரசு சாா்பில் காவலர்களின் மன நிலை, சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனால், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். அரிதான காவல் நிலைய கொடூர வழக்குகளில் மரண தண்டனை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டதாக தெரிவித்து, சிபிஐ தரப்பு வழக்குரைஞர் விஜயன் முன்னிலையாகி தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி 9 பேருக்கும் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.