தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளது குறித்து...
நமது சிறப்பு நிருபர்
தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி என்.சாய் குமாரை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையத்தின் செயலர் லதா திரிபாதி அனுப்பிய கடிதத்தில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மறுஆய்வு செய்தது. அதன்படி, மாநில அரசின் தலைமைச் செயலராக 1990-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி சாய் குமாரை நியமிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பொறுப்பில் இருந்து மாற்றப்படும் அதிகாரிகள் மறுஉத்தரவு வரும் வரை எவ்வித தேர்தல் தொடர்புடைய பணிகளிலும் நியமிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆணையத்தின் செயலர் தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில், தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் மற்றும் ஆயுதப் படை காவல் துறை தலைமை இயக்குநராக சந்தீப் மிட்டல் என்ற 1995-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இந்தப் பொறுப்பில் மூத்த ஐபிஎஸ் உயரதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் இதுவரை பணியாற்றி வந்தார். தேர்தல் ஆணையத்தின் இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற சில மணி நேரத்தில் இணைய குற்றத் தடுப்பு (சைபர் கிரைம்) தலைமை இயக்குநராக இருந்த சந்தீப் மிட்டலை ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் மற்றும் ஆயுதப் படை தலைமை இயக்குநராக நியமித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், தேர்தலை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸôம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் அதன் பார்வையாளர்கள்மூலம் கண்காணித்து வருகிறது.
இதையொட்டி, ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த வரிசையில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலரை மாற்றி ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றிவிட்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோரை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் நியமிக்க உத்தரவிட்டது.
வழக்கமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் டேவிட்சன் தேவாசீர்வாதம் வகித்து வந்த ஆயுதப் படை டிஜிபி பொறுப்பு தேர்தல் பணியுடன் தொடர்புள்ள பணி என்றபோதிலும், தேர்தல் பணி அல்லாததாகக் கருதப்படும், அவர் வகித்து வந்த ஊழல் தடுப்புத் துறை இயக்குநர் பணிக்கும் சேர்த்து சந்தீப் மிட்டல் என்ற உயரதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்க உத்தரவிட்டிருப்பது புதிய முன்மாதிரி நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.