கேரள மருத்துவமனைகளை கைப்பற்றும் வெளிநாட்டுப் நிறுவனங்கள்! மக்களின் நிலை?
கேரள மருத்துவமனைகளை வெளிநாட்டுப் நிறுவனங்கள் கைப்பற்றுவதால் மக்களின் நிலை குறித்து கவலை எழுந்துள்ளது.
கேரளத்தின் தனியார் மருத்துவமனைகள் வெளிநாட்டுப் பங்கு மூலதன நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டு வருவதால், லாபமே முதன்மை நோக்கமாக மாறி, நோயாளிகள் மற்றும் அவர்களுக்காக செலவிடும் உறவுகளின் நிதிநிலை கவலைக்குரியதாக மாறி வருகிறது.
கேரள மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநிலத்தின் மிக முக்கிய பிரச்னை ஒன்று குறித்து மக்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
வெளிநாட்டு மூலதன நிறுவனங்களால் இயக்கப்படும் மருத்துவமனைகளின் ஒரே நோக்கம் லாபம் ஈட்டுவதாக மட்டுமே இருக்கும், அவர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்ய வருவதில்லை. இதனால், அந்த மருத்துவமனைகளுக்கு வரும் சாதாரண ஏழை நோயாளிகளுக்கு, விளைவுகள் கடுமையாக இருக்கலாம் என சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
Advertisement
கேரளத்தில் உள்ள மிக முக்கிய மருத்துவமனைகளை இயக்குவது, இதுபோன்ற வெளிநாட்டு மூலதன நிறுவனங்கள்தான் என்ற தரவுகளோடு, இந்த ஒப்பந்தங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக தனியார் நிறுவனங்களை, இதுபோன்ற வெளிநாட்டு மூலதன நிறுவனங்கள் கைப்பற்றுவது குறித்து மக்கள் பெரிய அளவில் அக்கறை செலுத்துவதில்லை, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் அறிந்திருக்கவில்லை.
சரி, வெளிநாடு மூலதன நிறுவனங்கள் கேரளத்தை குறிவைத்திருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. அதாவது, கேரளத்தில் மிகச் சிறந்த மருத்துவமனைகள் அமைந்துள்ளன. அங்கு மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகம். வெளிநாட்டில் சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்களும் அதிகம் என்பதால் செலவிடுவதும் அதிகமாக முடியும்.
அங்குள்ள 70 சதவிகித மக்கள் தனியார் மருத்துவமனைகளை நம்பியிருக்கிறார்கள். வெறும் 30 சதவிகித மக்கள்தான் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.
கேரளத்தில் மொத்தமுள்ள சுமார் 4 கோடி மக்கள் தொகையில் 65 லட்சம் பேர் வயதானவர்கள். வயதானவர்கள் அதிகம் இருப்பதால் சுகாதாரத் தேவையும் அதிகமாக இருக்கும், மக்கள் செலவிடத் தயாராக இருப்பதும் வெளிநாட்டு மூலதன நிறுவனங்களை கேரள பக்கம் திருப்பியிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.அது மட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து சிகிச்சைக்காக கேரளம் வருவோர் எண்ணிக்கையும் அதிகமாம்.
எனவே, இந்த பிரச்னையை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் பழிபோடாமல், பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.