அரசுத் திட்டங்கள் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!
தேர்தல் அதிகாரியிடம் திமுக மீது அதிமுக புகார் அளித்துள்ளது பற்றி...
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரசுத் திட்டங்களை அரசியல் லாபத்திற்காக திமுக பயன்படுத்தி வருவதாக அதிமுக சார்பில் தமிழ்நாடு முதன்மைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விடியல் பேருந்து திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தமிழ் மின் நூலகம் போன்ற அரசுத் திட்டங்கள் மூலம் ஆளும் திமுக கட்சி பிரசாரம் செய்து வருவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாலமுருகன்,
Advertisement
"தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக அரசு, அரசுத் திட்டங்களை விளம்பரக் கருவியாக பயன்படுத்தி வருகிறது. இலவச பேருந்துகளில் ‘விடியல் பயணம்’ என்ற பெயரில் விளம்பரம் செய்யப்படுகிறது. அதேபோல், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், தமிழ் மின் நூலகம் இணையதளத்திலும் அரசு பணத்தில் திமுக அரசின் விளம்பரங்கள் இடம்பெற்று தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றன. இதுகுறித்து கடந்த 19.03.2026 அன்று முதன்மை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தமிழ் மின் நூலகம் தொடர்பான விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும், இதற்குப் பொறுப்பான அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவைப் பெறுவோம் என்று தெரிவித்தார்.