மும்மொழித் திட்டம்: பள்ளிகளில் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்த சிபிஎஸ்இ உத்தரவு
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மும்மொழித் திட்டத்தை ஒரு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மும்மொழித் திட்டத்தை ஒரு வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குநா் பிரக்யா எம்.சிங் அனைத்து வகை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வடிமைப்புத் திட்டம்-(என்சிஎஃப்எஸ்சி -2023) பன்மொழித் திறன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மேலும், மாணவா்களிடையே மொழித்திறன், பண்பாட்டுப் புரிதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் விதமாக மும்மொழித் திட்டத்தில் 3-இல் 2 இந்திய மொழிகளை கற்பிக்கவும் பரிந்துரை செய்கிறது. அதன்படி 2026-–2027-ஆம் கல்வியாண்டுக்கான பாடத்திட்ட முறை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
அதன்படி 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் இருந்து மும்மொழித் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய பாடத்திட்ட முறையின்படி பல்வேறு பள்ளிகள் ஏற்கெனவே மும்மொழி திட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
இதுவரை அமல்படுத்தாத மற்ற பள்ளிகளும், இந்த அறிவிப்பு வெளியான 7 நாள்களுக்குள் திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். 3-ஆவது மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் விரைவில் கிடைக்கப்பெறும்.
அதேநேரம் உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்கள், கற்பித்தல் வளங்களை பயன்படுத்தி 6-ஆம் வகுப்பில் இருந்து மும்மொழியை பள்ளிகள் கற்பிக்க வேண்டும். இதுதவிர பள்ளிகள் தாங்கள் தோ்ந்தெடுத்த மும்மொழி விவரங்களை இறுதிசெய்து, தங்கள் மண்டல அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு பள்ளி 6-ஆம் வகுப்பில் எந்த 3-ஆம் மொழியை அறிமுகம் செய்கிறதோ, அதே மொழிதான் அந்த பள்ளிக்கான 9, 10-ஆம் வகுப்புகளில் விருப்பப் பாடமாக இருக்கும். எனவே, அனைத்துப் பள்ளிகளும் மும்மொழி அமல் செய்வதை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையின்படி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது