முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூரின் சென்டிமென்ட் கை கொடுக்குமா? மக்கள் எதிர்பார்ப்பு என்ன?

ஸ்ரீபெரும்புதூரின் சென்டிமென்ட் காங்கிரஸுக்கு கை கொடுக்குமா, மக்கள் எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றி..

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:29 PM
ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடம்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:28 PM

திமுக தலைமையிலான கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வழக்கமான கோரிக்கையாக இருப்பது ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. ஆனால், இந்த முறை, காங்கிரஸ் கட்சிக்கு அந்த சென்டிமென்ட் கைகொடுக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கிறது கள நிலவரம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருப்பதால், அந்தத் தொகுதியை கைப்பற்றுவதில் காங்கிரஸ் கட்சி எப்போதுமே தீவிரம் காட்டி வரும்.

அந்த வகையில்தான் தற்போது 2026 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைக் கேட்டுப் பெற்றிருக்கிறது. இங்கு 2021ஆம் ஆண்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த முறையும் களமிறங்கியிருக்கிறார். மீண்டும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கை.

Advertisement

1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்ள் பிரதமர் ராஜீவ் காந்தி, அரசியல் பிரசாரத்தின்போதுதான் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அந்த சென்டிமென்ட், காங்கிரஸ் கட்சியின் பலமாக இதுவரை செயல்பட்டு வந்தது என்றே சொல்லலாம். அதுவும் அனைத்து முறையும் காங்கிரஸ் கட்சிக்கு அது கைகொடுத்ததில்லை என்றே தரவுகள் கூறுகின்றன. இதுவரை 7 முறை காங்கிரஸ் போட்டியிட்டிருந்தாலும் நான்கு முறைதான் வெற்றி பெற்றிருக்கிறது.

எனவே, ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கான சென்டிமென்ட் குறைந்து வரும் நிலையில், செல்வப்பெருந்தகையும் காங்கிரஸ் கட்சித் தலைவராகிவிட்டதால், தொகுதிப் பக்கம் வர முடியாமல் இருப்பதும், இந்தத் தொகுதியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் கே. பழனி, உள்ளூரிலேயே இருப்பதும் மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றே தெரிகிறது.

குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பது போன்ற உள்கட்டமைப்புகள் குறித்தும் மக்கள் புகார் கூறுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற மட்டும் தொகுதிகளில் பிரசாரம் செய்யாமல், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால், நிச்சயம் அந்தத் தொகுதிக்கு எம்எல்ஏவாக இருப்பவர் அவ்வப்போது சென்று அங்குள்ள பிரச்னைகளை காதுகொடுத்துக் கேட்டு அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகவும் உள்ளது.

இந்த முறை சில வெற்றி வேட்பாளர்களுக்கே வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதும்கூட, இந்த அடிப்படை விஷயங்களை வைத்துத்தான் என்றும் சிலர் கிசுகிசுக்கிறார்கள். ஒரு தொகுதியில் வெற்றி பெறுபவர், அடிக்கடி தொகுதிப் பக்கம் செல்ல வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டால், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் மீண்டும் தோற்க வாய்ப்பில்லை என்றும் மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் கேட்பது வெறும் வாக்குறுதிகள் அல்ல. எங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனடியாக அணுக ஒரு எம்எல்ஏ. எங்கள் பிரச்னையை கேட்க ஒரு பிரதிநிதி. அவ்வளவுதான் என்பதே ஒருமித்த குரல்.

இது யாருக்கு சாதகமாக இருக்கிறதோ, அவரே இந்தத் தொகுதியின் அடுத்த எம்எல்ஏவாக ஆவார் என்று கணிக்கப்படுகிறது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:29 PM
summary

Will Sriperumbudur's sentiments support the Congress and what are the people's expectations?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.