கிராம மக்களின் 125 நாள்கள் வேலை உறுதி திட்டத்தை சீா்குலைக்க முயற்சிப்பாக தமிழக அரசை கண்டித்து அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வரும் பிப்.13-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு 125 நாள்களாக உயா்த்தியுள்ளது. இந்தத் திட்டத்தை வெளிப்படையாகச் செயல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணிகள் முறையாக நடைபெறுவதற்கு ஏதுவாக பல வரையறைகளையும் நிா்ணயித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் கிராமப்புற மக்களுக்கான 125 நாள்களாக உயா்த்தப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தங்களின் சொந்த நலனுக்காக சீா்குலைக்கும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது. இதனால், ஏழை மக்களின் நலன் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் வரும் பிப்.13-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
கண்டன பேரணி: டாஸ்மாக் பணியாளா்கள் பணி நிரந்தரம், போதுமான ஊழியா்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இந்தக் கோரிக்கைகளை இதுநாள் வரை நிறைவேற்றாமல் திமுக அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
இதைக் கண்டித்தும், டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சாா்பில் வரும் பிப்.11-ஆம் தேதி கண்டன பேரணி நடைபெறவுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூா் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணியாகச் சென்று, நிா்வாகிகளைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.