இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே கூட்டணியை அறிவித்துவிடுவேன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினருக்கு வெள்ளிக்கிழமை முதல் விருப்ப மனு விநியோகத்தை கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவு இடத்தில் வைத்து இன்று தொடங்கி வைத்தார். தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனுவை பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம். பிப்ரவரி 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்களை வழங்கலாம். கூட்டணி குறித்த நிலைப்பாடு எப்போது அறிவிக்கப்படும், கூட்டணி குறித்து தற்போது வரை பல கட்சிகள் பேசி வருகின்றன.
இருப்பினும், உரிய நேரத்தில் தேமுதிகவின் அதிகாரப்பூர்வமான கூட்டணி முடிவை அறிவிப்பேன் என்று அவர் கூறினார். விஜயகாந்தின் ஆசீர்வாதத்துடன் இந்த தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெறும் என்றும், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். அனைத்து கட்சிகளுமே தேமுதிகவுக்குத் தோழமைக் கட்சிகள்தான். அனைவரும் நட்புறவோடு பேசி வருகிறார்கள். ஆனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பும், அதே சமயம் மக்களும் ஏற்கும் கூட்டணியை அமைப்போம் என்றார்.
மார்ச் முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கூட்டணி முடிவை அறிவிப்போம் என்று அவர் உறுதியளித்தார். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கோ அல்லது ஊகங்களின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கோ நான் பதில் அளிக்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பிரேமலதா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.