அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி! - கனிமொழி
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி நன்றி...
மகளிரின் நலனில் திமுக அரசு அக்கறை கொண்டு செயல்படுவதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிரின் வங்கிக் கணக்குகளில் இம்மாதம் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியுடன் மார்ச், ஏப்ரல் மாதத்துக்கும் சேர்த்து ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அரசியல் தலைவர்கள் பலரும் இதுபற்றி கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக எம்.பி. கனிமொழி,
"பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ. 3 ஆயிரத்துடன், கோடைக் காலச் செலவுகளைக் கருத்தில் கொண்டு சிறப்புத் தொகுப்பாக ரூ. 2 ஆயிரமும் சேர்த்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கியிருப்பதோடு, தமிழ்நாட்டு மகளிரின் நலனில் என்றும் அக்கறை கொண்டு செயல்படும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்ததும், மகளிருக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி" என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.