மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஆற்றிய உரைவில், பட்டுக்கோட்டையின் எதிர்கால வளர்ச்சியை மனதில்கொண்டு இந்தப் பேருந்து நிலையத்தைத் தாராளமான இடவசதியோடு, அதிநவீனமான கட்டுப்பாட்டு வசதிகளோடு கட்டியிருக்கிறோம். நம்முடைய முதல்வரின் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை எல்லா ஊருக்கும் எல்லாம் என்று அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் இந்த நகராட்சி முழுவதும் சுமார் 35 கிலோமீட்டர் நீளத்திற்குத் தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சியில் உள்ள குளங்கள் 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய சந்தை, புதிய பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. 5.00 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், 22.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகளுக்குப் புதிய வகுப்பறைகள், கழிப்பறைகள் எல்லாம் கட்டப்பட்டுள்ளன. 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் கொண்டிருக்கக்கூடிய புதிய அறிவுசார் மையம் என இந்தப் பட்டுக்கோட்டை நகராட்சியின் வளர்ச்சிக்காக நம்முடைய திராவிட மாடல் அரசு இன்று பல்வேறு பணிகளைச் செய்துள்ளது. இந்த மாதிரியான உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒரு புறமும், மறுபுறம் பொதுமக்களுடைய நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நம்முடைய முதல்வர் செய்து வருகிறார்.
இவை அனைத்தையும் விட மிக மிக முக்கியமான ஒரு திட்டம், இங்கே இவ்வளவு மகளிர் வந்திருக்கிறீர்கள், உங்களுடைய ஒவ்வொருவருடைய முகத்திலும் மகிழ்ச்சி தெரிகிறது. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திட்டம், அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். ஆட்சிப் பொறுப்பேற்கும்போது நம்முடைய தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்தோம். 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நம்முடைய முதலமைச்சர் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு அந்தத் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இந்த மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்களுக்குச் சேர்த்து 3,000 ரூபாய், அதோடு சேர்த்து கோடைக்கால சிறப்புத் திட்டம் என 2,000 ரூபாய் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாயை இன்று நம்முடைய முதலமைச்சர் மகளிருக்குக் கொடுத்திருக்கிறார். இன்று இந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டார்கள். இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தகர்த்தெறிந்து இன்று 5,000 ரூபாயை மகளிருக்கு கொடுத்திருக்கிறார். இப்படி மக்கள் நலத் திட்டங்களாக இருந்தாலும் சரி, பேருந்து நிலையம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும் சரி, நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இன்று புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தைப் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். மிக முக்கியமாக இந்த பேருந்து நிலையத்தை சுகாதாரமாக, தூய்மையாகப் பராமரிக்க நகராட்சிக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இனி இந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும், தமிழ்நாடு மேன்மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.