தவெக தலைவைர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6.64 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் உயர்நிலை மருத்துவ கருவிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மேலும், ரூ.2.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நவீன நீராவி சலவை கூடத்தையும், ரூ.1.20 கோடி செலவில் தொடங்கப்பட்ட பன்னோக்கு பல்மருத்துவ நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஒரே நாளில் ரூ.12 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் கோவை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் ரூ.9 கோடி மதிப்பில் கழிவுநீர் தேங்காத வகையில் கட்டமைப்பு மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார். அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கலைஞர் கருணாநிதி சாதனைகளை குறிப்பிடாமல் பேசுவது அறியாமையின் உச்சம் எனக் கூறினார்.
“விஜய் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாடு பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்துள்ளது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் உயர்கல்வித் துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது,” எனத் தெரிவித்தார். மேலும், “அங்கீகாரம் இல்லாமல் எந்த மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.