அமைச்சா் கோவி. செழியன் கோப்புப் படம்
தமிழ்நாடு

கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 5,000 ஊதியம்! அமைச்சர் அறிவிப்பு!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 5,000 ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக உதவிப்பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்கள் என அனைவருக்கும் மார்ச் 1 முதல் கூடுதலாக ரூ. 5,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-

”தமிழ்நாடு முதல்வரின் தலைமையிலான இவ்வரசு எப்பொழுதும், அரசு ஊழியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் துணை நின்று செயலாற்றி வருகிறது. அவர்களின் நலன் பேணுவதில் உறுதியுடன் செயல்பட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் நமது முதல்வர் உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு பல்வேறு உன்னதத் திட்டங்களை வழங்கி உள்ளார்.

இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் நமது மாணாக்கர்கள் முதன்மை பெற வேண்டும் என்று “நான் முதல்வன்” திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது உலகம் உங்கள் கையில் என்ற நிகழ்வின் மூலம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஆராய்ச்சியை மேம்படுத்த முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை, ஆய்வகங்களை மேம்படுத்த நிதி, தலைசிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பயில நடவடிக்கை போன்றவற்றை மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கும் பல்வேறு நிலைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கிராமப்புற மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் 2021-26 ஆம் ஆண்டில் 38 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 18,760 மாணாக்கர்கள் கூடுதலாக பயனடைந்துள்ளனர். அதேபோல், 250-க்கும் மேற்பட்ட புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. 2015-ஆம் ஆண்டிற்குப் பிறகு உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு நீதிமன்ற வழக்குகளின்மேல் நடவடிக்கை தாமதமான நிலையில், தற்போது 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது 5 பாடப்பிரிவுகளுக்கு உதவிப்பேராசிரியர்களை தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பாடப்பிரிவுகளுக்கும் விரைவில் நேர்காணலுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணாக்கர்களின் கல்விச் சேவை எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், 2016-இல் இருந்து உயர்த்தப்படாமல் இருந்த இவர்களின் ஊதியம் 2022-ல் ரூ.15,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர், மீண்டும் 2 ஆண்டுகளிலேயே (2024-ல்) ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

தற்போது மீண்டும் ரூ.25,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்த்திட தமிழ்நாடு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் மார்ச் 1 முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். அதேபோல் அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டிற்கு ரூ.53 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 8,741 பேர், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் 319 பேரும் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் 586 பேர் ஆகமொத்தம் 9,646 தற்காலிக ஆசிரியர்கள் இதன் மூலம் பயனடைவர்.

மேலும், தமிழ்நாடு முதல்வரால் 2025-26-ஆம் கல்வியாண்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு "முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவிடைமருதூர்" என பெயர் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.

Higher Education Minister K. V. Cheliyan has announced that honorary lecturers will be paid an additional salary of Rs. 5000 per month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்முட்டி - மோகன்லால் கூட்டணியின் பேட்ரியாட்! புதிய போஸ்டர்!

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

SCROLL FOR NEXT