கரூர் பலி: மத்திய உள்துறை அமைச்சகம், தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு!
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு.
கரூர்: கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை(ஜன. 9) காலை ஆய்வு மேற்கொண்டனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும், 110 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கரூரில் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள், நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடயவியல் துறை அதிகாரிகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர், கரூரில் தங்கி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை காலை கரூர் வேலுச்சாமிபுரத்தில் நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது நெரிசல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகமானோர் உயிரிழந்ததாகக் கருதப்படும் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் இருந்த இடத்தின் அருகில் உள்ள இடத்தினை அளவீடு செய்தனர்.
பின்னர் நெரிசலின்போது உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் சென்று, அவர்களின் குடும்பத்தினரிடம் நெரிசல் சம்பவம் எப்படி நடைபெற்றது என்பன குறித்து விசாரணை மேற்கொண்டனர்.