முகப்பு
தமிழ்நாடு

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்!

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.

Updated On : 9 ஜனவரி 2026, 11:22 am IST
உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின். - படம்: DIPR
பகிர்:

உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.

மக்களின் கனவுகளைக் கேட்டறிந்து அதனை செயல்படுத்தித் தருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்றதுமுதல் தற்போதுவரை செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளுடைய தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தை அறியவும், மக்களின் எதிா்காலக் கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவா்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இந்தத் திட்டம் அறிமுகமாகிறது.

Advertisement

Advertisement

சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கணக்கெடுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்துவ அடையாள எண்ணுடன் கனவு அட்டை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை (TNeGA) மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

உங்க கனவ சொல்லுங்க திட்டம்

இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒருங்கிணைக்கும்.

தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

தன்னார்வலர்கள், இரண்டு நாள்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர்.

இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

summary

Chief Minister Stalin launched the 'Tell Us Your Dream' scheme.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.