கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் கருணைக் கொடையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 12 பேருக்கு பொங்கல் கருணைக் கொடைக்கான காசோலைகளை முதல்வா் வழங்கினாா். இதன்மூலம் துறை நிலையிலான மற்றும் தொழிலாளா் சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,069 ஓய்வூதியதாரா்கள், 796 குடும்ப ஓய்வூதியதாரா்கள் பயன்பெறுவா்.
இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் 6,894 நிரந்தரப் பணியாளா்கள், 4,893 தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளா்கள் என மொத்தம் 11,787 பணியாளா்களுக்கும், 3,865 ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள் என மொத்தம் 15,652 போ் பொங்கல் கருணைக் கொடை பெற்று பயனடைகின்றனா்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா. முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.