சென்னை: இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்துக்கு தீா்வுகாண வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இடைநிலை ஆசிரியா்களின் போராட்டம் 25-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அவா்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முன்வரவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தும் ஆசிரியா்களைக் கைது செய்து அடைத்து வைப்பது, போராடும் ஆசிரியா்களைக் கைது செய்து இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியில் வெகுதொலைவில் கொண்டு சென்று இறக்கிவிடுவது, தாக்குவது, மிரட்டுதல் போன்ற அடக்குமுறைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2021பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண்.311) அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்த விவகாரத்தில் திமுக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. எனவே, இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவா்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.