அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.பி. தர்மர்
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம்.பி. தர்மர் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம்.பி. தர்மர் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி உடனான கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வந்த ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற அமைப்பு மூலம் தனியாக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருப்பதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் மாற்றுக் கட்சிக்கு தாவி வருகின்றனர்.
ஏற்கெனவே ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவிலும், ஜே.டி.சி. பிரபாகர் தவெகவிலும் இணைந்தனர்.
தற்போது அவர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு ஆதரவாளர் எம்.பி. தர்மர் ஓபிஎஸ் அணியைவிட்டு விலகியுள்ளார். தர்மர் கடந்த 2022-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு அவருடன் தர்மரும் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.