ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக! ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
சினிமாவில் என் தலைவர் ரஜினி என்றவர் விஜய் என ஆதவ் அர்ஜுனா பேச்சு...
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தமிழக வெற்றிக் கழகம் என்று அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
திமுக கொடுத்த பயத்தால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
''தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு வாரமாக கடும் மன வலியில் இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டார்.
தவெகவைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அசோக்கை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ''தவெகவுக்கு வர வேண்டும் என்றால் நேர்மை, உண்மை என்ற தகுதி இருந்தால் போதும். நம் அன்புக்குரியவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் என் தலைவர் ரஜினி என்றவர் விஜய்.
234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடும். 90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள். ஆனால், தவெக அடிபணியவில்லை.
ஆட்சியில் பங்கு என்பது எல்லாம் இல்லை. எனக்கு ஆஃபர் தேவையில்லை. தமிழக மக்களின் நலனே, நம்பிக்கையே முக்கியம் எனக் கூறினார் விஜய்.
முதல்வர் பதவிக்காக தில்லிக்கு அடிபணிய மாட்டோம். மதச்சார்பற்ற அரசை அமைக்கும் வலிமையை மக்கள் தருவார்கள்.
பராசக்தி படத்தை வெளியிட மத்திய அமைச்சரை சந்தித்துவிட்டு வரும் பழக்கம் இல்லை. பராசக்தி வெளியிடப்பட்ட நிலையில், ஜனநாயகன் நிறுத்தப்பட்டதற்கு அரசியல்தான் காரணம். இந்த அரசியலை அச்சமின்றி விஜய் எதிர்கொள்வார் எனக் குறிப்பிட்டார்.