தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? பிரேமலதா நாளை ஆலோசனை
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 23) நடைபெறவுள்ளது குறித்து...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 23) நடைபெறவுள்ளது. இதில் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணித் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
இம்முறை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.எம்.யு.எல்.) உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளன.
இக்கூட்டணியில் தேமுதிகவுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து திமுக - தேமுதிக பேச்சுவார்த்தைக்குப் பிறகு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. சட்டப்பேரவையில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.
இதனிடையே தேர்தல் பணிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை (மார்ச் 23) ஆலோசிக்கவுள்ளார்.