திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை பல்லக்கில் கொடிப்பட்டம் ரத வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. காலை 6.45 மணிக்கு சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர்.
கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடந்தது.
திருவிழா நம்பியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தர்ப்பைப்புல், மா இலை, சந்தனம், குங்குமம், மலர் மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 6.55 மணிக்கு பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் , தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக் கிடாய், அன்னம், சேஷம், வெள்ளி யானை, பச்சை குதிரை வாகனங்களில் தினம் ஒரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 28 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி கைபாரம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு நக்கீர லீலை நிகழ்ச்சியும், நடைபெறும் .
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக ஏப். 2 ஆம் தேதி சூரசம்ஹார லீலை நடக்கிறது, 3 ஆம் தேதி பட்டாபிஷேகம், 4 ஆம் தேதி திருக்கல்யாணம், 5 ஆம் தேதி தேரோட்டம், 6 ஆம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், கோயில் துணை ஆணையம் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.