வேளாங்கண்ணியில் நாளை சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்கிறார் விஜய்!
வேளாங்கண்ணியில் நாளை சிறப்புப் பிரார்த்தனையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பது பற்றி...
தவெக தலைவர் விஜய், நாளை(சனிக்கிழமை) அதிகாலை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெறவுள்ள சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி(திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த தோ்தலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இந்த நிலையில், தவெக தலைவா் விஜய் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
Advertisement
சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூா் முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த விஜய், தொடா்ந்து சீரடிக்குச் சென்று வழிபட்டாா்.
தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு விஜய் வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி விஜய் இன்று(வெள்ளி) இரவே வேளாங்கண்ணி சென்று தங்கி நாளை(சனிக்கிழமை) அதிகாலை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெறவுள்ள சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.