தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்
தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் என்று கபில் சிபல் கூறினார்.
புது தில்லி: தமிழ்நாட்டில் தனிப் பெருங்கட்சியாக வெற்றி பெற்ற தவெகவை, ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான கிபில் சிபில் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தனிப்பெருங்கட்சியான தவெகவை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் பெரும்பான்மை பெற்ற கட்சியாக எந்த ஒரு கட்சியும் உருவாகாத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தவெகவை ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும்.
Advertisement
ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தனிப்பெரும் கட்சி தவெக தான். மக்கள் தவெகவுக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். அதுபோல அடுத்த இடத்தில் இருக்கும் திமுக மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை.
பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல ஆளுநர் யார்? பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது சட்டப்பேரவையில்தான். ஆளுநருக்கு சட்டம் தெரியும் என்று நினைத்தேன். அவரும் பாஜக ஏஜெண்ட் போல செயல்படுகிறார்.
சட்டப்படி நடக்க ஆளுநர் விரும்பவில்லை என்றால், அதனை நீதிமன்றத்தின் மூலம் தவெக நடத்திக் காட்டலாம். சட்ட நிவாரணம் கோரி தவெக எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம்.