தமிழ்நாட்டில் குதிரை பேரம் நல்லதல்ல: பாஜக கண்டனம்
அமமுக எம்எல்ஏ ஆதரவளிப்பதாக தவெக கூறும் கடிதத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் குதிரை பேரம் தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லதல்ல என பாஜக கண்டனம்
அமமுக எம்எல்ஏ ஆதரவளிப்பதாக தவெக கூறும் கடிதத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் குதிரை பேரம் தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லதல்ல என பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளருடன் பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி பேசியதாவது, "தவெகவின் ஆதரவு கடிதத்தில் அமமுக எம்எல்ஏ ஒருவர் கையெழுத்திட்டதாக போலிக் கடிதத்தை உருவாக்கி, அதனை ஆளுநரிடம் கொடுத்ததாகக் கூறப்படும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளார்.
இது நிச்சயமாக குதிரை பேரம்தான். இது ஏற்கத்தக்கதல்ல. இது நியாயமற்றது. இது தமிழ்நாட்டு அரசியல் நலனுக்கு நல்லதல்ல. ஆகையால், நாங்கள் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுதொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுகுறித்து உடனடி விசாரணைக்கும் ஆளுநர் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
Advertisement
தமிழகத்தில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான 118 இடங்களை தவெக பெறாதநிலையில், அமமுக மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜ் தவெக-வுக்கு ஆதரவளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், எம்எல்ஏ காமராஜ் அளித்த கடிதம் போலியானது என்று டிடிவி தினகரனும் காமராஜும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
குதிரை பேரம் என்றால் என்ன?
அரசியலில் நிச்சயமற்ற நிலை ஏற்படும்போது, ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை பலம் இல்லாதபோது, அல்லது ஒரு கட்சியை வீழ்த்த நினைக்கும்போது, தனக்கு ஆதரவாக, எதிர்த் தரப்பில் உள்ள எம்எல்ஏக்கள் அல்லது எம்பிக்களை விலைபேசி வாங்குவதே 'குதிரை பேரம்' என்று சொல்லப்படுகிறது.
இதற்காக விலைபோகும் எம்எல்ஏக்களுக்கு அவர்கள் பணமோ அல்லது பதவியோ அல்லது வேறு ஏதேனும் பலன்களை வழங்குவதாகக் கூறலாம். அந்த எம்எல்ஏக்களும் இதற்கு இணங்கி ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குச் சென்றோ அல்லது வேறு ஏதோவொரு வகையிலே ஆட்சியமைக்க அல்லது ஆட்சியைக் கவிழ்க்க ஆதரவு தெரிவிக்கலாம்.