அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
அதிமுகவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
அதிமுகவில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவில் இரு பிரிவினராக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு தரப்பிலும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி. சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மற்றொரு தரப்பிலும் பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி. சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்குவதாகவும் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமையில் அறிவித்தார்.
இருப்பினும், தங்களை எடப்பாடி பழனிசாமியால் நீக்க முடியாது, தாங்கள் இப்போதும் கட்சியில்தான் இருப்பதாக நீக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
இந்த நிலையில், அதிமுகவில் நிலவிவரும் இந்த மோதல் காரணமாக, ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் இரு தரப்பினரிடையே நிலவிவரும் அரசியல் விவாதங்களால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என முன்னெச்சரிக்கையாக செயல்படுவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அசாதாரணக் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் தற்காலிகச் சோதனைச் சாவடிகளை அமைத்து, சிறப்புப் பாதுகாப்புக் குழுக்கள் கண்காணித்து வருகின்றன.
இந்தப் பகுதிக்குச் செல்லும் அனைத்து முக்கிய பாதைகளிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.