மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!
மனம் நொந்து அதிமுகவில் இருந்து விலகிவிட்டேன் என முன்னாள் அவைத்தலைவர் தனபால் தெரிவித்ததைப் பற்றி...
மனம் நொந்து அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அவைத்தலைவருமான தனபால் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று (மே 21) காலை நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ் செல்வன் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அவைத்தலைவருமான தனபாலின் மகனான லோகேஷ் தமிழ்ச்செல்வன், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்தார். அவருக்கு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்பின்னர், தனபால் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இருவரும் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து விலகி அவர் தவெகவில் இணைந்தார்.
1977, 1980,1984, 2001, 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டிருந்த தனபாலுக்கு இந்த முறை அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அதிமுக தலைமையும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், தனது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனின் பதவியேற்பு விழாவில் தனபால் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் தனபால் பேசும்போது, “நான் நீண்ட காலத்துக்கு முன்னதாகவே அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன். என்னுடைய மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் அமைச்சரவையிலேயே அமைச்சராக இன்று பதவியேற்றிருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியுடன் அதைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்.
நான் பல பதவிகளை அனுபவித்தவன். என்னுடைய மகனும் அந்த இடத்திற்கு செல்வதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகளவில் இளைஞர்களின் ஈடுபாட்டைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை பல வழிகளில் புறக்கணித்தார்கள்.
எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால், என் மகன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். நான் உடல்நிலை சரியில்லாததால், வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். எல்லோரும் (எடப்பாடி பழனிசாமி உள்பட பலர்) தவறு செய்தார்கள். இப்போது அதனை அனுபவித்து வருகிறார்கள். எல்லாரையும் அவர்கள் புறக்கணித்தார்கள். இன்று மக்கள் அவர்களைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மிதிவண்டியில் சென்று, கட்சிப் பணியை செய்த என்னை கட்சியில் இருந்து புறக்கணித்தார்கள். எனக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகி வந்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.