மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்! அதிமுகவில் இருந்து விலகிய பெஞ்சமின் பேட்டி!
மக்களுக்கு நன்மையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக திமுகவில் இணைந்திருக்கின்றேன் என அதிமுகவில் இருந்து விலகிய பெஞ்சமின் தெரிவித்துள்ளது குறித்து...
அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இன்று (ஜூன் 10) இணைந்தார்.
அதிமுகவின் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் பெஞ்சமின். 1988-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார்.
2021, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில்களில் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே கடந்த மாதம் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அவர் திமுகவில் இணைந்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பெஞ்சமின் பேசியதாவது:
''திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக திமுக உள்ளது. மு.க. ஸ்டாலினின் அரவணைப்புடன் திமுகவில் இன்று இணைந்துள்ளேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் மு.க. ஸ்டாலினின் மாண்பினால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்துள்ளேன்.
இதுவரை நான் சார்ந்திருந்த இயக்கத்திற்கு உண்மையாகப் பணியாற்றியதைப்போல, மு.க. ஸ்டாலின் கட்டளையை ஏற்று திமுகவில் என் களப்பணியை ஆற்றுவேன்.
இனிவரும் காலங்களில் திமுக தலைவர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கட்டளை ஏற்று சகோதரத்துவத்துடன் களப்பணியாற்றுவேன்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுகவில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகளை கட்டுக்கோப்புடன் மு.க. ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.
நான் சார்ந்திருந்த இயக்கத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு வந்த தலைமையை ஏற்று பணியாற்றினேன். ஆனால், இன்றைய அரசியல் சூழல், தொடர்ந்து மக்களுக்கு நன்மையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக திமுகவில் இணைந்திருக்கின்றேன்'' எனக் குறிப்பிட்டார்.