பேரவைக் கட்சித் தலைவராக வேலுமணி; கொறடாவாக விஜயபாஸ்கரை நியமிக்க கோரிக்கை!
பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகருடன் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மீண்டும் சந்திப்பு...
சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகருடன் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் இன்று மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அதிமுகவின் கொறடா யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யாமல் உள்ள நிலையில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, காமராஜ், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் பேரவைத் தலைவரைச் சந்தித்துள்ளனர்.
தங்கள் தரப்பை தனி அணியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தங்கள் தரப்பு சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும் கொறடாவாக சி. விஜயபாஸ்கரையும் நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement
மேலும் சட்டப்பேரவையில் இருக்கையை மாற்றுவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு தரப்பின் கடிதங்களும் ஆய்வில் உள்ளதாக பேரவைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுகவில் இபிஎஸ்ஸுக்கு எதிராக சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து சட்டப்பேரவையில் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். முதல்வர் விஜய்யும் அவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதேபோல, அதிமுகவில் தாங்கள்தான் பெரும்பான்மை என்றும் தவெகவுக்கு எதிராக வாக்களித்ததால் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவரிடம் சி.வி. சண்முகம் தரப்பு மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.