விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!
வன்னி அரசு அமைச்சராகப் பதவியேற்பார் - திருமாவளவன் அறிவிப்பு...
தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் வென்று எம்எல்ஏவாகப் பதவியேற்ற வன்னி அரசு அமைச்சராகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றனர். அவர்களைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று (மே 21) நடைபெற்றது. புதியதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவியேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மட்டுமில்லாது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அடுத்ததாக இணைந்துள்ளது.
அக்கட்சியிலிருந்து வன்னி அரசு அமைச்சராகப் பதவியேற்பார் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (மே 21) இரவு அறிவித்தார்.
இது குறித்து, விசிக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின் இன்று செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன், “எங்கள் உயர்நிலைக் குழுவில் அமைச்சரவையில் இடம் பெறாமல் ஆதரவு தருவது என்று முடிவு எடுத்தோம். ஆனால், உயர்நிலைக் குழுவில் பெரும்பாலானவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தைச் சொன்னதால் அதனை மீண்டும் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு வன்னி அரசு பெயரை தமிழக அமைச்சரவைக்குப் பரிந்துரைத்திருப்பதாகத்” தெரிவித்தார்.
அவர் பேசியதாவது : “தவெக தரப்பிலிருந்து வெளிப்படையான அழைப்பு வந்தது. அந்த அழைப்பையொட்டி, கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவதை பரிசீலிக்க வேண்டும் என்றனர்.
கூட்டணி ஆட்சி முறையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்த முதல் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 1999-களிலேயே நாங்கள் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது, முன்வைத்த முழக்கம் ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்பதாகும். ஆகவே, தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சிமுறை என்பது அறிமுகமாகிறது.
எனவே, தவெக விடுத்த அழைப்பையும் கணக்கில் கொண்டு, கட்சியின் நீண்டகால கனவையும் கருத்திற்கொண்டு, இந்த முடிவை எடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை பெரும்பான்மையான பொறுப்பாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆகவே, இப்போதைக்கு நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்” என்றார்.
திமுகவுடன் கூட்டணியில் தொடருகிறதா விசிக? என்ற கேள்விக்கு, ‘பின்னர் பதிலளிக்கப்படும்’ என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது திருமாவளவன் தெரிவித்தார்.
VCK Vanni Arasu decides to join the government, says VCK chief Thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.