கோவை சிறுமி பாலியல் கொலை! முதல்வர் கடும் நடவடிக்கை எடுப்பார்: சூலூர் எம்எல்ஏ
கோவை சிறுமி பாலியல் கொலை சம்பவத்தில் முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என சூலூர் எம்எல்ஏ சுகுமார் உறுதி
கோவை சிறுமி பாலியல் கொலை சம்பவத்தில் முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என சூலூர் எம்எல்ஏ சுகுமார் உறுதியளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார் பேசியதாவது, "சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால், உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்தவுடன் முழுமையான தகவலும் தெரியவரும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பார். அவர்களின் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்காக என்னால் முடிந்த நிதியுதவி அளித்தேன். அதிகபட்ச நிவாரண உதவி வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்துள்ளேன்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்தை இதுவரையில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு முன்னர் இதே இடத்தில் 6 சம்பவங்கள் நடந்துள்ளன. வடமாநிலத்தவரைத் தாக்கியுள்ளனர், மீன்பிடிக்கச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர், கார் கவிழ்ந்து ஒருவர் பலியாகியுள்ளார்.
இதுகுறித்து கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பவ இடமான குட்டையும் சாலையும் ஒரே மட்டத்தில் இருக்கிறது. குறைந்தபட்சம் 3 அல்லது 4 அடிக்கு ஒரு சுற்றுச்சுவர் அல்லது வேலி போட்டிருக்கலாம். ஆனால், எதுவும் செய்யவில்லை. அந்த இடத்தில் நிறைய சம்பவங்கள் நடந்தும், கடந்த ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை.
முதலில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அத்தனை ஊழல் நடந்தது. ஆனால், எங்கும் விளக்கு அமைக்கப்படவில்லை.
சம்பவ இடத்தில் வெளிச்சம் இருந்திருந்தால், இதுபோன்று நடந்திருக்காது. இதுவும் ஒரு காரணம்.
சம்பவம் தொடர்பாக நேற்றிரவு தொடங்கிய விசாரணையில் இன்று காலையிலேயே குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில், அதிகபட்ச தண்டனையாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏனெனில், இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் எங்குமே நடக்கக் கூடாது.
ஒரு பெண்ணை அனுமதியில்லாமல் தொடுவது என்பது மோசமான விஷயம்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுப்பார். ஏனெனில், இது போதைப் பழக்கத்தால் ஏற்பட்டது. இனிமேல் நானே காவல்துறையினருடன் இரவு ரோந்து செல்லவுள்ளேன். எனக்கு வேறு வழியில்லை. எனக்கு உட்பட்ட பகுதியிலாவது இவ்வாறான சம்பவங்கள் இருக்கக் கூடாது என்பது என்னுடைய ஆசை" என்று தெரிவித்தார்.