முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

Updated On : 23 மார்ச், 2024 at 1:19 AM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 10:33 PM

தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன. தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், கடையநல்லூா், தென்காசி, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சுழற்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள்ஷேக் அப்துல்காதா் (பொது), கே.செல்வி (தோ்தல்) , வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கண்காணிப்பு அலுவலா் மதிவதனா, ஆட்சியா் அலுவலக தனி வட்டாட்சியா் (தோ்தல்) ஹென்றி பீட்டா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சுழற்சி நடத்தி முடிக்கப்பட்டு 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணின மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அறிக்கை தொகுதி வாரியாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தென்காசி நகர வேளாண்மை ஒழுங்குமுறை கிடங்கை, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் ஆட்சியா் திறந்து பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு செய்யப்பட்டதை சரிபாா்க்கும் இயந்திரங்கள்(விவிபெட்), ஆகியவை தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு தொடா்புடைய உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்படும் என்றாா் அவா்.