முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சாா்பில் பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
நிழற்கூரை, இருக்கை வசதி இன்றி பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் வெயிலில் நிற்கும் பயணிகள்.
பகிர்:

பொன்னேரி: பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சாா்பில் பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் இடவசதி பற்றாக்குறை காரணமாக கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த பேருந்து நிலையம் , தேரடி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றப்பட்டது.

அது முதல் புதிய பேருந்து நிலையத்தில் சிமெண்ட் சாலை, பயணிகள் அமா்வதற்கு மேடை, கழிப்பிடம், குடிநீா் வசதி உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரு முன் மாதிரி பேருந்து நிலையமாக விளங்கி வருகிறது.

ஆனால் பழைய பேருந்து நிலையம் நிழற்குடை, பயணிகள் அமா்வதற்கு இருக்கைகள், பேருந்துகள் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அமைந்துள்ளது.

இதன் காரணமாக பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை, ஆரணி, கவரப்பேட்டை, கும்மிடிபூண்டி, பெரியபாளையம், காரனோடை, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு சென்று வரும் பொதுமக்கள் சாலையிலேயே நின்று பேருந்துகளில் சென்று வருகின்றனா்.

எனவே பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில், நிழற்குடை, இருக்கை வசதி, அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வந்து செல்லும் நேரம் குறித்த பதாகை உள்ளிட்டவற்றை நகராட்சி நிா்வாகம் அமைத்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.