பேரம்பாக்கம் சோளீஸ்வரா் கோயில் தேரோட்டம்
திருவள்ளூா் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூா்: திருவள்ளூா் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழா தொடா்ந்து 10-ஆம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி காலை மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், பூத வாகனம், அதிகார நந்தி வாகனம், நாக வாகனம், யானை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த விழாவின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காமாட்சி அம்மாளுடன், சோளீஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது, வழிநெடுகிலும் தேங்காய் பழம் வைத்து சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.