நிகர நேரடி வரி வசூல் ரூ.4.89 லட்சம் கோடியாக அதிகரிப்பு
நாட்டின் நிகர நேரடி வரி வசூல் ரூ.4.89 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நிகர நேரடி வரி வசூல் ரூ.4.89 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புள்ளிவிவரத்தை சுட்டிக்காட்டி அந்த வாரியத்தின் உயரதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மூன்றாவது வாரம் வரையிலுமான காலத்தில் நிகர அளவிலான நேரடி வரி வசூல் ரூ.4.89 லட்சம் கோடியாக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15.7 சதவீத வளர்ச்சியாகும்.
வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிதியாண்டில் நேரடி வரிகள் மூலம் ரூ.11.5 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இலக்கில் 42 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இறுதி வரையிலுமாக ரூ.1.09 லட்சம் கோடி மதிப்பிலான 2 கோடி ரீஃபண்டுகளை வருமான வரி துறை வழங்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் வரி செலுத்தியோருக்கு 1.22 கோடி ரீஃபண்டுகள் வழங்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் அது 62 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோன்று ரீஃபண்ட் மதிப்பும் ரூ.83,000 கோடியிலிருந்து 31.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
அக்டோபர் 21-ஆம் தேதி நிலவரப்படி 5.8 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 3.6 கோடியாக காணப்பட்டது. ஆக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 61 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.26 கோடியாக உள்ளது. கடந்தாண்டில் மட்டும் 1.06 கோடிபேர் புதிதாக வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் இணைந்தனர்.
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் கூடுதலாக 1.25 கோடி பேரை வரி செலுத்துவோர் பட்டியலுக்குள் கொண்டு வர வருமான வரி துறை இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார் அவர்.